வட கொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜாங் நாம் கொலை வழக்கில் அவர் மீது விஷம் ஸ்பிரே செய்த இரு பெண்கள் மீது மலேசிய நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங் நாம். மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கடந்த மாதம் 13 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.
அவர் மீது வி.எக்ஸ் என்ற தடை செய்யப்பட்ட கொடிய இரசாயனத்தை ஸ்பிரே செய்த வியட்நாம் பெண் டோன் தி ஹாங், இந்தோனேஷியப் பெண் சிதி ஆயிஷா ஆகியோரை மலேசியப் பொலிஸார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் குறும்பு வீடியோ நிகழ்ச்சி என நினைத்து, நண்பர்கள் கொடுத்த இரசாயனத்தை கிம் ஜாங் நாம் மீது ஸ்பிரே செய்ததாகக் கூறினர்.
இவர்களை மலேசியப் பொலிஸார் நேற்று முன்தினம் (01.03) கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்த வழக்கில் மரண தண்டனை கிடைக்கும் என குறித்த பெண்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.






