அமைச்சர் மனோ கணேசன் அமைச்சுப் பதவியை துறந்து மக்களுக்கு சேவையாற்றவேண்டும் : செ.மயூரன்!!

245

அமைச்சர் மனோ கணேசன் அமைச்சுப் பதவியை துறந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்தார்.

வவுனியா செட்டிகுளத்தில் கிராமிய சித்த மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள் என்று சொல்வதற்கு எங்களுக்கு தயக்கங்கள் இருக்கின்றது. ஏனெனில் அங்குள்ளவர்களுக்குள் ஒற்றுமையில்லை, கருத்து முரண்பாடுகள் உள்ளது என்று ஊடகங்கள் வாயிலாக கருத்துக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றது. அதனை நாம் பகிரங்கமாக ஒத்துக்கொள்கின்றோம்.

கடந்த காலங்களில் இல்லாத மாகாணசபைதான் தற்போது வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே எல்லோருடைய மனங்களையும் திருப்திப்படுத்தும் நிலையில் இல்லை. 4 வருடத்தில் எங்களால் முடிந்ததை செய்துகொண்டிருக்கின்றோம். பலதரப்பட்ட விமர்சனங்கள் உண்டு. அதனையும் தாங்கி விட்டுக்கொடுக்காமல் மூவின மக்களுக்கும் வாழும் வடக்கில் இன பேதங்களை மறந்து சேவையை செய்துகொண்டிருக்கின்றோம்.

இன்று முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் மீது விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்றது. மக்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் ஊழல் அமைச்சர்கள் என்ற கருத்து காணப்படுகின்றது. ஆனால் அப்படியல்ல. விசாரணை முடிந்த பின்னர்தான் யார் நிரபராதி யார் குற்றவாளி என்பது தெரியவரும் அதுவரை யாரையும் ஊழல் கண்ணோடு பார்க்க முடியாது. சமூக சேவை என்று வருகின்ற போது பல விமர்சனங்கள் வரும்.

இந்த நாட்டின் தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனே கணேசன் ரவிராஜ் கொலை வழக்கில் பாரதூரமான தீர்ப்பு வரும் பட்சத்தில் அதற்காக போராடுவேன் என கூறியிருந்தார். ஆனால் இன்று அவர் அந்த தீர்ப்பு வந்தும் அமைதியாக இருக்கின்றார். அது ஏன் என்று நான் ஒரு மாதத்திற்கு முன்னர் கேட்டிருந்தேன். அதற்கு அவர் தனது முகநூலிலும் ஊடங்களிலும் மயூரன் என்ற மாகாணசபை உறுப்பினரை தனக்கு தெரியாது என்றும் நான் அவரை பதவி விலகுமாறு கூறியதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை.

ஆனால் குறித்த அமைச்சரிடம் இன்று நான் பகிரங்கமாக கூறவிரும்புகின்றேன். நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்காது அமைச்சர் பதவியை துறந்து சேவை செய்யுங்கள். அத்துடன் நான் தமிழில் சொன்னதை புரிந்துகொள்ளமுடியாத நீங்கள் ஏன் மொழி அமைச்சராக இருக்கின்றீர்கள் என்பதும் தெரியவில்லை.

நீர்கொழும்பு நீதிமன்றத்தில் தமிழ் மொழி பேசும் இளைஞர் யுவதிகளை பணிக்கு நிமிக்க வேண்டும் என தொலைபேசியில் உரையாடியிருந்தேன். கடிதமும் அனுப்பியிருந்தேன். அப்படியிருக்கும்போது நீங்கள் என்னை தெரியாது என்கிறீர்கள். தங்களுக்காகவே இந்த அமைச்சுப்பதவி வடிவமைக்கப்பட்டது. ஆனால் நீங்கள் இந்த அமைச்சராக வந்த பின்னரே எழுதும் எழுத்துக்கள் பிழையாக காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் நீங்கள் அமைச்சு பதவியை துறக்கவேண்டும் என தெரிவித்தார்.