குவைத்தில் இலங்கை பெண் ஒருவரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த பெண் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டுள்ளதாக அரபு டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர் மாடி கட்டடம் ஒன்றிலேயே இரு இலங்கையரும் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த கட்டடத் தொகுதியில் தீ பிடித்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு படையினர் பொலிஸாரின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர்.
இதன் பின்னரே குறித்த அறையில் எரிந்த நிலையில் இலங்கைப் பெண் மீட்கப்பட்டு பெப்டைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதித்தை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி குறித்த இலங்கைப் பெண் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அதிகாரியிடம் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த இலங்கைப் பெண் அதே நாட்டை சேர்ந்த நபர் ஒருவருடனேயே தங்கி வந்துள்ளார் என்று பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.
இருப்பினும் சம்பவம் தொடர்பில் இலங்கைப் பிரஜையிடம் விசாரணை மேற்கொண்ட போது, பெண் தீ மூட்டி தற்கொலை செய்ய முயற்சித்தார். எனவே அவரை காப்பாற்ற முயற்சித்த போதே தன் கை மற்றும் கால்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அவரது சாட்சியத்தில் நம்பிக்கை இல்லை என்பதால் குறித்த நபரை அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.