வவுனியாவில் மாபெரும் பேரணி : எங்கள் அழுகுரல்கள் உங்கள் செவிகளுக்கு எட்டவில்லையா?

215

 
வவுனியாவில் கடந்த 9நாட்களாக சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தலைமையில் இன்று (04.03.2017) காலை 10.30 மணியளவில் மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்றது.

வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகி புகையிரத நிலைய வீதியூடாக, மணிக்கூட்டுக்கோபுரம் வழியாக பசார் வீதி சென்று, இலுப்பபையடி யூடாக நீதிமன்ற வழியாக போராட்டம் இடம்பெறும் இடத்தினை சென்று நிறைவடைந்தது.

குறித்த பேரணியில் எங்கள் தாய்மாரின் அழுகுரல்கள் உங்கள் செவிகளுக்கு எட்டவில்லையா?, காணாமல் ஆக்கப்பட்டவருக்கு நிதிவழங்கு, சகல அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய் போன்ற வாசகங்களைத் தாங்கியவாறு பெருமளவான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாக சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசாவும் கலந்து கொண்டனர்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறு ஜனாதிபதிக்கு தபால் மூலமான கவனயீர்ப்புப் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.