வவுனியாவில் நகரசபைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!

310

 
வவுனியாவில் இன்று (05.03.2017) காலை 10.30 மணியளவில் மன்னார் வீதி, வேப்பங்குளம் பகுதி மக்கள் நகரசபையினருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையிலுள்ள பொதுமக்கள் தமது குப்பபைகளை நகரசபையினர் கடந்த இரண்டு மாதங்களாக எடுப்பதற்கு வரவில்லை, இது தொடர்பாக வவுனியா நகரசபையினருக்குத் தெரிவித்தும் தமது குப்பைகளை அகற்ற நகரசபை ஊழியர்கள் முன்வரவில்லை என்று தெரிவித்து இன்று காலை அப்பகுதியில் ஒன்றிணைந்து நகரசபையினரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

நேற்று அப்பகுதிக்குச் சென்ற நகரசபை ஊழியர்கள் அப் பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றவில்லை தமது பகுதியைக்கடந்து சென்று வேறுபகுதிகளில் குப்பைகளை அகற்றி வருகின்றார்கள் என்று தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளரிடம் தொடர்பு கொண்டபோது, நகரபைக்கு குறித்த பகுதி மக்களால் எழுத்து மூலமான அறிவிப்பு விடுக்கப்படவில்லை என்றும் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு எழுத்து மூலமான அறிவிப்பு விடுக்கும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.