சோமாலியாவில் பட்டினியால் 110 பேர் உயிரிழப்பு!!

656

 
சோமாலியாவில் பட்டினியால் 110 பேர் உயிரிழந்துள்ளனர். ஆபிரிக்க நாடான சோமாலியாவில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் குடிநீர் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, அதன் காரணமாக அங்கு வாழும் 30 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சோமாலியாவின் தென் மேற்கு வளைகுடா பகுதியில் மாத்திரம் 48 மணி நேரத்தில் 110 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

பலியானவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் காணப்படுவதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே சோமாலியாவை வறட்சியில் பாதித்த பேரழிவு நாடாக சோமாலிய அதிபர் முகமது அப்துல்லாகி பார்மஜோ அறிவித்துள்ளார்.

மேலும் உதவி செய்யும்படி அமெரிக்காவிலுள்ள முன்னணி 13 அறக்கட்டளை நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சோமாலியா அடிக்கடி வறட்சியால் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த 1992 ஆம் ஆண்டில் 220,000 பேர் வறட்சி காரணமாக உணவின்றி உயிரிழந்துள்ளனர், அதே போன்று 2010 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலும் 260,000 பேர் பட்டினியால் பலியாகியுள்ளனர்.