வவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு!!

559

 
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் இன்று (08.03.2017) காலை 9 மணியளவில் தமது பொருளாதார மேம்பாட்டிற்காக தினமும் உழைக்கும் இரு பெண்மணிகளை பாராட்டும் வைபவம் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்துடன் இணைந்து தமிழ் விருட்சம் அமைப்பு இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

மாவட்ட சமூக சேவை அலுவலகர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாஸன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் கண்ணன் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் கலாசார உத்தியோகத்தர் பண்டிதர் பிரதீபன், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜே.கென்னடி தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன், ஆகியோரும் சிறகுகள் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் .

இந்நிகழ்வில் வவுனியா மாவட்டத்தில் மிக நீண்ட காலமாக ஸ்ரேசன் வீதி வவுனியாவில் அதிர்ஸ்டலாப சீட்டு விற்பனையில் ஈடுபட்டு தனது பொருளாதார தேவைகளை நிறைவேற்றி வரும் இரண்டு கால்களும் நடக்க முடியாத மாற்றுத்திறனாளிப் பெண்ணான செல்வி செல்லையா சந்திரிகா அவர்களும் இளம்பிள்ளை வாததத்தால் இரண்டு கால்களும் நடக்கமுடியாத மாற்றுத்திறனாளிப் பெண்ணான நீண்டகாலமாக வவுனியா நகர சந்தையில் தயிர் சட்டிகள் விற்றுவரும் சங்கர் சாரதா என்பவரும் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பத்திரங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பெண்கள் தமது பொருளாதார வளர்ச்சிக்கும் குடும்பச் செலவுகளுக்கும் தமது சொந்தக்காலில் நின்று உழைத்து வருகின்றனர் என்பதற்கு இந்த இரண்டு பெண்களும் சிறந்த உதாரணமாக விளங்குகின்றனர் . இலங்கைப்பெண்கள் வளர்ந்த நாட்டுப்பெண்கள் போன்று அதிக உரிமைகள் சலுகைகளை அனுபவித்து வருகின்றனர் .

எனினும் வடகிழக்கில் பெண்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர் . அதில் பொருளாதார பிரச்சனை பிரதானமானது. அவற்றைத்தீர்க்க சுயதொழில்கள் நல்ல பலனைப்பெற்றுத் தரும் . என்பதற்கு இந்த இரண்டு பெண்களும் நல்ல உதாரணம் என மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் தனது உரையில் குறிப்பிட்டார் .