4000 இளம் பெண்களை விபசாரத்துக்காக கடத்தி 250 கோடி ரூபா சம்பாதித்த தம்பதியினரை டில்லி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளுக்கு பங்களாதேஷ் வழியாக பெண்கள் கடத்தப்படும் கொடூரம் ஓசையின்றி நடந்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் கடத்தப்படுவதை உளவுத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
அந்த வகையில் பெண்களை கடத்தும் கும்பலை பிடிக்க நாடெங்கும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
அப்போது டில்லியைச் சேர்ந்த அபக் உசேன், சாய்ரா பேகம் என்ற கணவன் மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
i3இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட போது, அவர்கள் பெண்களை கடத்தி, விபசாரத்தில் ஈடுபடுத்துவதையும், விற்பனை செய்வதையும் மிகப்பெரிய தொழில் போல செய்து வருவதை கண்டுபிடித்தனர்.
இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 4,000 இளம்பெண்களை ஏமாற்றிக் கடத்தி விபசாரத்துக்காக மற்றவர்களிடம் விற்பனை செய்து இருப்பது தெரிய வந்தது.
ஒவ்வொரு பெண்ணையும் விற்கும் போதும் இலட்சக்கணக்கில் பணம் கிடைத்ததால், நாளடைவில் அவர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் புரோக்கர்கள், ஏஜெண்டுகளை நியமனம் செய்து பெண்களை கடத்தி விற்பனை செய்வதை விரிவுபடுத்தியுள்ளனர்.
பெண்களை கடத்தி விற்பனை செய்வதன் மூலம் அவர்கள் மிகக்குறுகிய காலத்தில் ரூ. 250 கோடி வரை சம்பாதித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பணத்தை கொண்டு அவர்கள் டில்லி உட்பட பல இடங்களில் சொகுசு பங்களாக்கள் வாங்கி உள்ளனர்.
டில்லி புறநகர் பகுதியில் பெரிய பண்ணை வீடும் வாங்கி, அங்கு வசித்து வந்தனர். இவர்கள் மீது சந்தேகம் வந்து விடக்கூடாது என் பதற்காக உசேனும், சாய்ரா பேகமும் 2 போலி நிறுவனங்களை நடத்தி வந்தனர். பெண்களை விற்பனை செய்வதற்கு அவர்களது நிறுவனங்கள் உதவியாக இருந்துள்ளன.
10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அபக்உசேனும், சாய்ரா பேகமும் ஏழையாக இருந்தவர்கள். இருவரும் வேலை தேடி டில்லி சென்றுள்ளனர். ஐதராபாத்தைச் சேர்ந்த அபக்உசேன், டில்லி சென்று ஒரு நிறுவனத்தில் 3,000 ரூபா மாத சம்பளத்தில் பணி புரிந்துள்ளார்.
அப்போது அவருக்கு உத்தரபிரதேச மாநிலம் மொரதாபத்தைச் சேர்ந்த சாய்ரா அறிமுகம் ஆகியுள்ளார். சாய்ரா விபசார தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவரை 1999ஆம் ஆண்டு அபக்உசேன் திருமணம்செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து பெண்களை கடத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
குறுகிய காலத்தில் ஏராளமான பெண்களின் விபசாரம் மூலம் அவர்கள் அதிகளவில் பணம் சம் பாதித்துள்ளனர்.
தற்போது கைதாகி சிறையிலுள்ள அவர்களுடன் பெண்களை கடத்திய குற்றத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அபக்உசேன் – சாய்ரா இருவரும் பெண்களை கடத்தி விற்று சம்பாதித்த பணம் மூலம் வாங்கிய 18 பங்களாக்கள், 5 கார்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதில் ஜெய்ப்பூரில் உள்ள ரூ. 35 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு, பகவன் நகரில் உள்ள ரூ.12 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாக்களும் உள்ளடங்குவதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.