காதலித்து திருமணம் செய்த இளைஞருக்கு 17 லட்சம் அபராதம்!!

268

காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞருக்கு பாகிஸ்தான் பழங்குடியினர் நீதிமன்றம் 7 லட்சம் அபராதம் விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமாபாத், சிந்து மாகாணத்தின் கந்த்கோட்-காஷ்மோர் மாவட்டம் தங்வானி அருகேயுள்ள பஜர் அபாத் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் எட்டு மாதங்களுக்கு முன்பு வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த காதல் திருமணத்தால் தங்களுக்கு சமுதாயத்தில் அவப்பெயர் ஏற்பட்டு விட்டதாக மணப்பெண்ணின் வீட்டார் பழங்குடியின நீதிமன்றம் என்று கூறப்படும் “ஜிர்கா’வில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஜிர்கா பழங்குடியின நீதிமன்றம், கட்டுப்பாடுகளை மீறி திருமணம் செய்து கொண்ட இளைஞர் குற்றவாளி என தீர்ப்பளித்து. அவரின் செயலால் மணப்பெண் வீட்டார் அவமானத்தை சந்திக்க நேர்ந்ததாகவும், அதற்கு அவர்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.17 லட்சத்தை மணமகன் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மேலும், காதல் திருமணம் செய்து கொண்ட அந்த ஜோடியை மூன்று மாதங்களுக்கு கிராமத்தைவிட்டு விலக்கி வைக்குமாறும் தீர்ப்பளித்த்தது. இந்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழங்குடியின நீதிமன்றங்களுக்கு சட்ட அதிகாரம் அளிக்கும் வகையிலான மசோதாவுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கும் வகையிலும், சிறிய அளவிலான குடும்பப் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வை காணும் வகையிலும் பாகிஸ்தான் அரசு இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.