தாயை கட்டியணைத்து வர மறுத்த குட்டி குரங்கு : நெஞ்சை உருக வைக்கும் பாசப்போராட்டம்!!

327

தனது தாய் வாகனத்தில் அடிபட்டு இறந்ததை தாங்கி கொள்ள முடியாத குட்டி குரங்கு கண்ணீர் விட்டு அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பகுதியின் போக்குவரத்து பாதைகளில் யானை, மான் மற்றும் குரங்குகளின் நடமாட்டம் இருக்கும்.

மேலும் தாளவாடியில் இருந்து சாம்ராஜ்நகர் செல்லும் வழியில் எலந்தூர் என்ற இடத்தில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சியால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.

இதனால் குரங்குகள் தாளவாடி அருகே மலைப்பகுதியில் செல்லும் புளிஞ்சூர், மைசூர் தேசியநெடுஞ்சாலையோரம் உணவைத்தேடி குட்டிகளுடன் உட்கார்ந்து இருக்கின்றன.

இந்நிலையில், அந்த பகுதியில் தனது குட்டி குரங்குடன் சுற்றித்திரிந்த தாய் குரங்கு வாகனத்தில் அடிபட்டு இறந்துபோனது. ஆனால் குட்டி குரங்கோ, தனது தாயை பிரிய மனமின்றி, தலை, முகத்தை வருடியபடி அதன் அருகிலேயே அமர்ந்திருந்தது.

பயணிகள் சிலர் தாய் குரங்கிடம் இருந்து குட்டியை பிரிக்க முயன்றபோது, அது தாயை இறுக பிடித்துக்கொண்டு வரமறுத்துள்ளது.

அதன்பின்னர், அப்பகுதி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இறந்துபோன குரங்கு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இருப்பினும் ஐந்தறிவு படைத்த குட்டிக்குரங்கின் வருத்தம், ஆறறிவு கொண்ட மனிதர்களின் மனதையும் கலங்க செய்துள்ளது.