100 வயதில் ஆச்சரியப்படுத்தும் மூதாட்டி!!

298

உலக மகளிர் தினத்தை, பல விதங்களில் கொண்டாடுவோர், விதவிதமான வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளும் நிலையில், 100 வயது பாட்டி லட்சுமி அம்மாள், அன்றாட நிகழ்வுகளை, நமது நாளிதழில் படித்து, விவாதித்து மற்றவர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.

தமிழ்நாடு, மதுரை, சத்யசாய் நகரில் வசிக்கும் இவர், 1917ல் கடலுாரில் பிறந்தார். அப்பா சீனிவாச ஐயர். இவருடன் பிறந்தவர்கள், ஒன்பது பேர்.

‘ராலிஸ் இந்தியா’ நிறுவனத்தில், உயர் பொறுப்பில் இவரது அப்பா பணிபுரிந்துள்ளார். அதனால், பல மாநிலங்களுக்கும், அவரோடு பயணப்பட்டுள்ளார்.

ஆந்திராவில் கடப்பா, விஜயவாடா, கர்னுால் என, பல ஊர்களில் படித்தாலும், விருத்தாசலத்தில், ஐந்தாம் வகுப்போடு, கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவருக்கு, 10 வயதில் திருமணம்; கணவர் ராஜாராமையர், மாயவரத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார்.

இப்போது, லட்சுமி அம்மாள், தன் தம்பி மகன் சுவாமிநாதனுடன், சத்யசாய் நகரில் வசித்து வருகிறார். தினமும், நமது நாளிதழை வரி விடாமல் படிக்கும் இவர், தற்போதைய அரசியல் களத்தை விளாசி தள்ளுகிறார். துல்லியமாக காது கேட்கவில்லை. எந்த கேள்வியை எழுதிக் கொடுத்தாலும், பதில் அளிக்கிறார்.

இனி அவரே பேசுகிறார்….வீட்டில் சுவாமிநாதனுடனும், அவரது மனைவி பானுமதியுடன் தான் விவாதிப்பேன். தினமலர் நாளிதழில் ஆன்மிக மலர், சிறுவர் மலர், வார மலர் என அத்தனை இணைப்புகளையும் படிப்பேன். சின்ன வயதில், அப்பாவுடன் பல ஊர்களுக்கு பயணித்ததால் அன்றாட நிகழ்வுகளை, மாறுதல்களை அறியும் வாய்ப்பு கிடைத்தது.

இது, புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது, வயதான நிலையிலும், என் அன்றாட பணிகளை நானே செய்கிறேன். யார் எங்கே இருந்தாலும், சௌக்கியமா இருக்கணும் என்பது தான் என் பிரார்த்தனை, ஆசீர்வாதம் என்று என்று அவர் கூறினார் .