
பட்டாசு தொழிலுக்கு பெயர் பெற்ற சிவகாசி நகரில் பட்டாசு மொத்த விற்பனையாளராக இருந்து வருகிறார் மருத்துவர் கணேஷ்.
இவரின் மறுபக்கமோ இறந்தவர்களின் கண்களை உறவினர்களின் சம்மதத்துடன் தானமாக பெற்று பிறருக்கு ஒளி கொடுப்பதுதான்.
கடந்த 8 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் மொத்தம் 623 கண்தான விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். இதுவரை மொத்தம் 2560 ஜோடி கண்களை உறவினர்களின் சம்மதத்துடன் தானமாக பெற்று 5120 பேர் பார்வை பெற காரணமாக இருந்திருக்கிறார்.
கண்தான விழிப்புணர்வுக்காக மட்டும் மொத்தம் 172 விருதுகள் பெற்றுள்ள இவர் ராமநாதபுரத்தில் பள்ளி மாணவ,மாணவியர்களுக்காக நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில், இறந்து விட்டால் கண்களைத் தானம் செய்யலாம் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஓரளவேனும் ஏற்பட்டிருப்பதே இதற்கு காரணம்.
கண்ணாடி போட்டிருப்பவர்கள், கண்புரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளவர்களும் கண்தானம் செய்யலாம்.
70 வயது முதியவரின் கண்களைக் கூட தானமாக பெற்று 7 வயது சிறுவனுக்கும் பொருத்தி ஒளி கொடுக்கலாம். பிறவியிலேயே பார்வையிழந்தவர்களுக்கு மட்டும் கண்களைப் பொருத்தி பார்வை கொடுத்து விட முடியாது.
கருவிழியில் பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும்தான் வேறு கண்களைப் பொருத்தி வாழ்வளிக்க முடியும்.
ஒருவர் இறந்து விட்டால் இறந்த 6 மணி நேரத்துக்குள் கண்களை தானமாக பெற வேண்டும். கண்தானம் செய்யும் நபர்,பதவி ஆகியன குறித்து நாங்களே எங்கள் சொந்த செலவில் நன்றி அல்லது கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளை நகர் முழுவதும் ஒட்டி விடுவோம். ஒருவரிடம் கண்களைத் தானமாகப் பெற ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.
ஒருவர் இறந்து விட்டால் அவரது சடலம் வைக்கப்பட்டிருக்கும் வீட்டின் முன்பாக இருக்கும் அடையாளங்களைத் தெரிந்து கொண்டு அந்த வீட்டுக்குச் சென்று முக்கிய உறவினர்களைச் சந்தித்து கண்தானத்தின் அவசியத்தைப் பக்குவமாக விளக்கி சம்மதம் பெறுவோம்.
ஆட்டோ,ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள்,மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை செய்பவர்கள், செவிலியர்கள், ஈமச்சடங்கில் ஈடுபடுவோர் போன்றவர்களும் நண்பர்களாக இருப்பதால் இறப்புத் தகவல்களை இவர்கள் மூலமாகவும் உடனுக்குடன் தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலும் விழிப்புணர்வு முகாம்களில் பங்கேற்ற மாணவ,மாணவியர்களே பக்கத்து வீட்டில் யாராவது இறந்து விட்டால் உடனடியாக செல்போன் மூலம் எங்களிடம் சொல்லி விடுவார்கள். அதிகமான இறப்புத் தகவல்கள் பள்ளி மாணவ,மாணவியர்களால் தான் வந்துள்ளது.
நாங்கள் நடத்தும் கண்தான விழிப்புணர்வு முகாம்களில் கண்களின் அமைப்பு,செயல்படும் விதம்,கண்நோய்கள் வரக் காரணங்கள்,கண்களில் நோய் வராமல் பாதுகாக்கும் விதங்கள்,கண்தானத்தின் முக்கியத்துவம் ஆகியன குறித்து கதை போல சொல்லப்படும்.
கண்தானம் செய்த பிறகு இறந்தவரின் முகத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை குறுந்தகடு மூலம் திரையிட்டுக் காட்டப்படுகிறது. திரைப்பட நடிகர்கள் விளக்கம் அளிக்கும் குறுந்தகடுகளையும் போட்டுக் காட்டுகிறோம் என்று கூறியுள்ளார்.





