திருமணம் செய்து வைத்தால் பணம் செலவாகும் என்பதால் அண்ணன் ஒருவர் தங்கையை கொலை செய்த சம்பவமொன்று டில்லியில் இடம்பெற்றுள்ளது.
டில்லியின் கிழக்குப் பகுதியிலுள்ள ஹசன்பூரைச் சேர்ந்தவர் லாக்கி என்பவர் தனது மனைவி, மகன், மருமகள் மற்றும் வளர்ப்பு மகள் சித்ராவுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
கல்வியில் தேர்ச்சி காட்டினாலும் சித்ராவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கவலை லாக்கியை வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது.மகன் திருமணமாகி குடும்பத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் மகள் சித்ராவுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டுமென மகன் தபஸிடம் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த திங்களன்று சித்ரா தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி
யடைந்த லாக்கி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் சித்ரா வின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தியதில், சித்ரா வினைக் கொலை செய்தது லாக்கியின் மகன் தபஸ் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பொலிஸார் தபஸை கைது செய்து நடத்திய விசாரணையில், குடும்பத்தில் தான் மட்டுமே உழைப்பதாகவும், தனது குடும்பத்தில் சித்ரா ஒரு சுமையாக இருந்ததாகவும், சித்ராவின் திருமணத்துக்கான பணத்தை எப்படித் திரட்டுவது என்பது குறித்து தனது தந்தை கடும் கவலை கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், தனது மனைவியுடன் தினமும் சண்டையிட்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.இதனால், சித்ராவை தீர்த்துக் கட்டினால் இந்தப் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிடும் என்று நினைத்த தபஸ் கடந்த திங்கட்கிழமை மாலை வீட்டில் தனியே இருந்த சித்ராவை கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாகவும், தன் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக, சித்ராவின் மரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்த வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் தபஸ் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
செலவைக் குறைப்பதற்காக அண்ணன் தங்கையை கொலை செய்த சம்பவம் டில்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.