மனைவி தொடர்ந்து இரவில் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கொலை செய்த சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தின் குன்றத்தூர், திருநாகேஸ்வரம், துரைசாமி வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் முத்துராமன் (31), பெயின்டர். இவரது மனைவி தனலட்சுமி (20). அதே பகுதியிலுள்ள அலங்காரக் கடையில் பணிபுரிந்து வந்தார்.
இவர்களுக்கு கடந்த 10 மாதத்துக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தனலட்சுமியின் செல்போனுக்கு அடிக்கடி அழைப்பு வந்ததாகவும், அப்போதெல்லாம் அவர் யாரும் இல்லாத இடத்துக்கு செல்போனை எடுத்துச் சென்று நீண்ட நேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுரேஷ்குமார் கேட்டபோது, சரியான பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், சுரேஷ்குமாருக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் தனலட்சுமியின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது.
அப்போது, அவர் போனுடன் வெளியே சென்று நீண்ட நேரம் பேசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், வெளியே சென்று, ‘இந்த நேரத்தில் யாரிடம் போனில் பேசுகிறாய்,’ என கேட்டுள்ளார்.
அதற்கு, ‘என்னுடன் வேலை செய்யும் தோழியிடம் பேசுகிறேன்,’ என தனலட்சுமி கூறியுள்ளார். உடனே, ‘போனைக் கொடு நான் பேசுகிறேன்,’ என சுரேஷ்குமார் தனலட்சுமியிடமிருந்து செல்போனை பிடுங்கியுள்ளார். அவர், போனைக் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், வீட்டினுள் சென்று சமையலறையிலிருந்த கத்தியை எடுத்து வந்து தனலட்சுமியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், தனலட்சுமி இரத்த வெள்ளத்தில் கீழே வீழ்ந்துள்ளார். இதனையடுத்து, அங்கிருந்து சுரேஷ்குமார் தப்பி ஓடியுள்ளார்.
தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச்சென்ற அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு குரோம்பேட்டை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து, குன்றத்தூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, தனலட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், தப்பியோடிய சுரேஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.