வெள்ளைப் பச்சை அரிசிக்குச் சிவப்புச் சாயம் சேர்க்கப்பட்டு சிவப்பு அரிசியாக விற்பனை செய்யப்படுகின்றது என வவுனியா மாவட்ட செயலகத்தில் பொதுமகன் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது முறைப்பாட்டின் உண்மைத் தன்மையை நிரூபிப்பதற்காக சோற்றுச் சட்டியை அவர் மாவட்ட செயலகத்துக்குக் கொண்டுவந்து மாவட்ட செயலரிடம் காண்பித்தார். அது தொடர்பாக விசாரித்தறிந்த மாவட்ட செயலாளர் அந்த அரிசி மாதிரியைக் கொழும்புக்கு அனுப்பி அறிக்கை பெறுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருக்கு உத்தரவிட்டார்.
கடந்த 2ம் திகதி வவுனியாவில் பிரபல்யமான வியாபார நிலையத்தில் 5 கிலோ பச்சை அரிசியை அந்தப் பொதுமகன் கொள்வனவு செய்துள்ளார்.
அரிசியில் சந்தேகம் கொண்ட அவர் அது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினருக்கு அறிவித்துள்ளார். அதற்குரிய சரியான பதில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரால் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்குச் சென்றபோது அங்கு அதிகாரி இல்லை என்று பதிலளிக்கப்பட்டது என்றும் கூறப்படுகின்றது.
நேற்று அந்த அரிசியைச் சோறாக்கியபோது அதிலிருந்து சிவப்புச் சாயம் வெளிக்கிளம்பியது. அவர் சோற்றுச் சட்டி சகிதம் மாவட்ட செயலகம் வந்து முறைப்பாடு செய்தார்.
மாவட்டசெயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் விவரங்களைக் கேட்டறிந்தனர். மாவட்ட சுகதார வைத்திய அதிகாரியின் பணிமனையிலுள்ள சுகாதாரப் பரிசோதகரும் முறைப்பாடு பதிவு செய்தார். அரிசி மாதிரியும் பெற்றுக் கொள்ளப்பட்டது.