பரீட்சையில் சித்தியெய்த உதவும் மந்திரப் பேனை : குஜராத் கோயிலில் விற்பனை!!

317

குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்திலுள்ள கோயில் ஒன்று, மாணவர்கள் பரீட்சையில் சித்தியெய்த உதவும் மந்திரப் பேனைகளை விற்பனைக்கு வைத்துள்ளதுடன், அதுபற்றிய விளம்பரங்களையும் பிரசுரித்து வருகிறது.

ஆஞ்சனேய பக்தர் ஒருவர் இந்தப் பேனைகளை விற்பனை செய்து வருகிறார். ஹனுமான் சரஸ்வதி யாகத்தில் வைக்கப்பட்ட இந்தப் பேனைகள் மிகவும் சக்தி வாய்ந்ததெனவும், இதைக் கொண்டு எழுதும் பரீட்சைகள் அனைத்துமே மாணவர்களுக்கு வெற்றியைத் தேடித் தரும் என்றும் அந்த விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் 1,900 ரூபாய்க்கு இந்தப் பேனை விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், இந்தப் பேனையைக் கொண்டு எழுதப்பட்ட பரீட்சையில் மாணவர் ஒருவர் சித்தியெய்தத் தவறிவிட்டால், பேனைக்கான பணத்தை மொத்தமாகத் திருப்பித் தருவதாகவும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமாக, இந்தப் பேனைகளை வாங்குபவர்கள் பாடசாலை அடையாள அட்டை, பரீட்சைக்கான அனுமதி போன்ற ஆவணங்களின் பிரதிகளைக் கையளிப்பவர்களுக்கு மட்டுமே இந்தப் பேனைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.