வவுனியாவில் 22வது நாளாக தொடரும் போராட்டம் : கதறியழும் தாய்மார்கள் : நெஞ்சை உலுக்கும் காட்சிகள்!!

268

 
வவுனியாவில் கடந்த 22 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (17.03.2017) 22வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள் இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி எமக்கு எதுவும் தெரியாது என்று இந்த அரசாங்கம் கூறலாம், எமக்கு தெரியும் இவர்களை இந்த அரசுதான் வைத்திருக்கின்றது என்று. விசாரணை என்ற பெயரில் இராணுவத்திடம் நாம் ஒப்படைத்த பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று இந்த அரசு கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அவர்களை நாம் பத்திரமாக இந்த அரச இராணுவத்திடம் ஒப்படைத்தோம் ஆனால் இன்றோ அவர்களை தொலைத்தவர்களாய் தேடி அலைகின்றோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கதறி அழுதனர்.