பின்னவல பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பிரதி அதிபரின் கையின் நடுவிரலை உடைத்த மாணவர் ஒருவரை ரம்புக்கனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இப்பாடசாலையில் 13 ஆம் தரத்தில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவர் கையில் வளையம் ஒன்றை அணிந்தவாறு பாடசாலைக்கு சென்றுள்ளார். ஒழுக்கத்துக்கு முரணான வகையில் இவ்வாறான அணிகலன்களை பாடசாலைக்கு அணிந்துவந்தமை குறித்து அம்மாணவனிடம் பாடசாலையின் பிரதி அதிபர் வினவியுள்ளார்.
அதன்போது, பிரதி அதிபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இம்மாணவன் அவரின் கையின் விரல் உடைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். காயமடைந்த பிரதி அதிபர் உடனடியாக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
இவ்வாறு தாக்குதல் நடத்திய மாணவன் இதற்கு முன்பதாகவும் ஒழுக்கத்தை மீறிய சம்பவமொன்று தொடர்பாக 14 நாட்கள் வகுப்புத்தடைக்கு உள்ளாகியிருந்தவரென பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் ரம்புக்கனை வலய கல்விப்பணிமனை மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.