சென்னையில் பரிதாபமாக பலியான இலங்கைப் பெண் : சித்தப்பா உருக்கம்!!

296

பிரபல கார்பந்தய வீரர் அஸ்வின் மற்றும் அவரது மனைவி நிவேதா ஆகியோர் சென்னை பட்டினப்பாக்கத்தின் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக விபத்து ஏற்பட்டு கார் எரிந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகினர்.

அஸ்வின் சுந்தர் தந்தையின் பெயர் சண்முகசுந்தர் என்றும் வேலூரில் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

தாயாரின் பெயர் லதா எனவும் இவர் காட்பாடி பஞ்சாயத்து தலைவராக இருந்துள்ளார் என்றும் இவர்களது ஒரே மகன் தான் அஸ்வின் சுந்தர் எனவும் கூறப்படுகிறது.

மேலும் நிவேதா இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். இவருடைய பெற்றோர் குமரன், ஷகிலா கொழும்பில் வசிக்கிறார்கள். நிவேதா மருத்துவம் படிப்பதற்காக சென்னை வந்தார். போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்துவந்தார்.

அப்போது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் அஸ்வின் சுந்தரும், நிவேதாவும் சந்தித்துக் கொண்டதாகவும், முதல் சந்திப்பிலே இருவருக்கும் காதல் ஏற்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் இவர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அஸ்வினின் சித்தப்பா கணேஷ் இது குறித்து கூறுகையில், நிவேதா மருத்துவப் படிப்பை முடித்தவுடன் தேனிலவு கொண்டாட இருவரும் முடிவு செய்தனர். நிவேதா மருத்துவப் படிப்பை சில நாட்களுக்கு முன்பு நிறைவு செய்தார். இதையடுத்து அஸ்வின் சுந்தரும், நிவேதாவும் ஒரு வாரத்தில் வெளிநாடு சென்று தேனிலவு கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அதற்குள் இருவரும் இந்த உலகை விட்டே சென்றுவிட்டனரே என்று மிகவும் மனவேதனையுடன் கூறியுள்ளார்.