வவுனியாவில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியை மீது தாக்குதல் : ஆசிரியர் காயம்!!

791

வவுனியா செட்டிக்குளம் இலுப்பக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இன்று (21.03.2017) காலை 8.30 மணியளில் பெற்றோர் ஒருவரால் பெண் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

கடந்த 13.03.2017 அன்று வவுனியா நகரசபை மைதானத்தில் விளையாட்டுப்போட்டியொன்று இடம்பெற்றது. இவ் விளையாட்டுப் போட்டியில் மாணவியொருவர் ஒர் இளைஞனுடன் தனிமையில் கதைத்துக் கொண்டிருந்துள்ளார். இதனைப் பார்த்த குறித்த பெண் ஆசிரியர் குறித்த மாணவியின் பெற்றோரை அழைத்து இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் குறித்த மாணவியின் செயற்பாடுகளின் அதிருப்தியடைந்த பெண் ஆசிரியர் மீண்டும் பெற்றோரை அழைத்து குறித்த மாணவியின் செயற்பாடுகளை தெரிவித்துள்ளார். சரி நாங்கள் பார்க்கின்றோம் எனத் தெரிவித்து விட்டுச் சென்ற பெற்றோர் இன்று (21.03.2017) காலை 8.30 மணியளவில் அதிபரை சந்தித்துள்ளனர்.

இதன் போது அதிபருக்கு அருகே நின்ற குறித்த பெண் ஆசிரியர் சரமாரியாகத் தாக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் இவ்விடயம் தொடர்பாக செட்டிக்குளம் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.