வீட்டில் தனியாக இருந்த பெண் மர்மமான முறையில் கொல்லப்பட்ட விவகாரத்தில் கணவரே கொலை செய்துவிட்டு நாடகமாடியமை பொலிஸாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தமிழகத்தின் ஆரல்வாய்மொழி மங்கம்மாள் வீதியைச் சேர்ந்தவர் ஆதித்தன். செங்கல் சூளை தொழிலாளி. இவரது மனைவி ஷாலினி ( 27). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
எனவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். எனினும் ஷாலினியை ஆதித்தன் அவ்வப்போது சந்தித்து பொருள் உதவி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 15ஆம் திகதி ஷாலினியை சந்திக்க ஆதித்தன் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு பூட்டப்பட்டிருந்துள்ளது.
இதைத் தொடர்ந்து பின்பக்க கதவு திறந்திருந்த நிலையில் அவ்வழியாக சென்றபோது படுக்கை அறையில் நிர்வாண நிலையில் ஷாலினி இரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதுதொடர்பாக ஆதித்தனின் பேரில் பொலிஸார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் ஷாலினியுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் ஷாலினியை கொலை செய்ததற்கான எவ்வித ஆதாரமும் அவர்களிடம் கிடைக்கவில்லை.
இதையடுத்து பொலிஸாரின் சந்தேகம் ஷாலினியின் கணவர் மீது திரும்பியது. ஷாலினி மின் கட்டணம் செலுத்த பணம் கேட்டிருந்ததாகவும், அதனை கொடுக்கச் சென்றபோது தான் ஷாலினி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததாகவும் பொலிஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஷாலினியை கொன்றது அவரது கணவர் ஆதித்தன் என்பது உறுதியானது. அவரை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.விசாரணையில் ஆதித்தன் அளித்த வாக்குமூலத்தில் , கடந்த 14ஆம் திகதி செங்கல் சூளைக்கு இரவு வேலைக்கு சென்றேன். ஷாலினிக்கு பணம் கொடுக்க ஷாலினியின் வீட்டுக்கு சென்றபோது அங்கிருந்து இரு இளைஞர்கள் வெளியே சென்றதை கண்டு ஆத்திரமடைந்தேன்.
இதனால் ஷாலினியுடன் வாக்குவாதம் செய்து தலையணையால் அழுத்தியும், கத்தியால் கழுத்தில் குத்தியும் கொலை செய்தேன்.
பின்னர் ஷாலினி பல ஆண்களுடன் தொடர்பில் உள்ளதால் அவர்கள் மீது கொலையை திசை திருப்பும் நோக்கில் ஷாலினியை நிர்வாணமாக்கி, பீரோவில் இருந்த பொருள்களை வீசினேன். பின்னர் வழக்கம் போல் சூளைக்கு வேலைக்கு சென்றேன் என வாக்குமூலத்தில் கூறினார். இதைத் தொடர்ந்து கைதான ஆதித்தனை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.






