மாத்தளை, அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த, கணவனை இழந்த நிர்மலா பத்மகுமாரி மெனிக்கே என்ற பெண்ணுக்கு இலங்கையின் கிரிக்கெட் நட்சத்திரம் திலகரட்ண தில்ஷான் தனது சொந்த செலவில் வீடொன்றை நிர்மாணித்துக் கொடுத்துள்ளார்.
இப் பெண்ணின் கணவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் மின்சார தாக்குதலில் உயிரிழந்திருந்தார். இந்தப் பெண்ணுக்கு 11 மற்றும் 7 வயதுகள் கொண்ட இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
தனது கணவன் உயிரிழந்ததன் பின்னர் இரு பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு குடியிருந்த வீட்டின் காணி உறுதியை அடகு வைத்து இப் பெண் ஐந்தரை இலட்சம் ரூபா கடனாக பெற்றிருந்தார்.
இந்தநிலையில் கடனாகப் பெற்ற பணத்தை செலுத்த முடியாமல் போனமையினால் தனது வீட்டை இழக்கும் நிலைமையை எதிர்நோக்கியிருந்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் கேள்வியுற்ற மாத்தறையிலுள்ள கோடீஸ்வர வர்த்தகரான விதானஆரச்சி மாத்தளைக்கு சென்று குறித்த வீட்டின் மீதான கடனை செலுத்தி வீட்டை கடனிலிருந்து மீட்டுக் கொடுத்துள்ளார்.
இதேவேளை இவ் விடயத்தை அறிந்த இலங்கை கிரிக்கெட் வீரர் திலக்கரட்ண தில்ஷான், தனது சொந்த செலவில் அப் பெண்ணுக்கு வீடு ஒன்றை நிர்மாணித்து தருவதாக உறுதியளித்தார்.
தனது பழைய வீட்டை வர்த்தகரின் உதவியுடன் நிர்மலா மீட்டிருந்திருந்த நிலையில் தான் அளித்த வாக்குறுதிக்கமைய அப் பெண்ணுக்கும் அவரது இருபிள்ளைகளுக்கும் தில்ஷான் வீடு ஒன்றை நிர்மாணித்து கையளித்திருந்ததுடன் நேற்று முன்தினம் அவ் வீட்டை யும் திறந்து வைத்தார்.