கானாவில் நீர்வீழ்ச்சி ஒன்றில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
கானாவின் கின்டம்போ பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற நீர்வீழ்ச்சியிலேயே நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட புயல் காரணமாக குறித்த மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கானாவின் தேசிய தீயணைப்புப் படையின் பேச்சாளர் பிரின்ஸ் பில்லி அநக்லேட், இது வழமைக்கு மாறான ஒரு சம்பவமாகும் என தெரிவித்துள்ளார். சரிந்து வீழ்ந்த மரத்தை அகற்றும் பணியில் ஒருங்கிணைந்த பொலிஸ் பிரிவினர் மற்றும் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
பாரிய மரமொன்று மலையோடு சேர்ந்து சரிந்து வீழ்ந்தது என சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்போது உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் வென்ச்சி உயர் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனையவர்கள் சுற்றுலாப் பயணிகளாவர்.
மேலும் தீயணைப்புப் படை பேச்சாளர் அநக்லேட், 18 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ஏனைய இருவர் வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்ததாகவும் ஏ.எவ்.பி. க்கு தெரிவித்துள்ளார்.
காயமடைந்த 20 பேரும் கின்டம்போ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக கானாவின் சுற்றுலாத் துறை அமைச்சர் கதெரின் அபெலெமா அபெகு தெரிவித்துள்ளார்.