விரைவில் இலங்கை வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் : ஏன் தெரியுமா?

435

லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்கிவைக்கவுள்ளார்.

வவுனியாவின் சின்னடம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் அறக்கட்டளை. லைகா அதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகை அவர்களின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை இது.

இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் மாதம் 9ம் திகதி இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. விழாவில் தனது கரங்களால், தமிழ் மக்களுக்கு இந்த புதிய வீடுகளை வழங்குகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இலவச வீடுகள் வழங்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கேட்டபோது, ஈழத்தமிழர்களுக்கான நிகழ்ச்சி என்ற காரணத்தினால் உடனே மகிழ்ச்சியுடன் வரச் சம்மதித்தார். அவர் இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வது இதுவே முதல்முறையாகும்.

இந்த நிகழ்ச்சியில் வட மாகாண முதல் அமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், மலேசிய செனட் தலைவர் எஸ் விக்னேஸ்வரன், பிரிட்டன் அனைத்துக் கட்சி தமிழ் பாராளுமன்ற குழுத் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி மற்றும் ஜஸ்டிஸ் கமிட்டி உறுப்பினர் கீத் வாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.