பறந்துகொண்டிருந்த விமானத்தில் பாம்பொன்றைக் கண்டு பயணிகள் திடுக்கிட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஞாயிறன்று, அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தின் அனியெக் நகரிலிருந்து அம் மாநிலத்தின் மிகப் பெரிய நகரான அன்கரேஜே நோக்கி ரவ்ன் அலஸ்கா நிறுவன விமானமொன்று பறந்து கொண்டிருந்தது.
அப்போது, விமானி பயணிகளிடம் வந்து, இவ் விமானத்துக்குள் பாம்பொன்று உள்ளது. ஆனால், அது எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை என்றார்.
அவ் வேளையில், விமானத்தின் பின்புறப் பகுதியில், பாம்பு ஒன்று கிடப்பதைக் கண்டு, அருகிலிருந்த தனது தாயாரிடம் “அங்கே பாருங்கள்,.. என்ன அது” என்று கேட்டான்.
தனது மகன், சுட்டிக்காட்டிய பகுதியை பார்த்த மேற்படி பெண், பாம்பொன்று கிடப்பதை உறுதிப்படுத்தினார்.
அப் பாம்பின் ஒரு பகுதி பை ஒன்றினால் மூடப்பட்டிருந்தது. எனினும், விமானத்துக்குள் பெரும் பீதி ஏற்படவில்லை. அப் பாம்பு விஷமற்றது என்பதும் உறங்கிக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.
அதையடுத்து, விமானத்தின் ஊழியர் ஒருவரும், விமானியும் இணைந்து அப் பாம்பை பை ஒன்றுக்குள் போட்டனர்.
அதன்பின் ஆசனங்களுக்கு மேலாகவுள்ள பொதிகள் வைக்கும் பகுதியில் மேற்படி பாம்பு வைக்கப்பட்டது. இப் பாம்பு சுமார் 5 அடி நீளமானதாக காணப்பட்டது.
இப் பாம்பை விமானத்தின் முன்னைய பயணத்தின்போது, அதாவது அன்கரேஜ் நகரிலிருந்து அனியக் நகருக்கு பயணி ஒருவர் எடுத்து வந்துள்ளதாகவும் ஆனால், அவர் இறங்கும்போது பாம்பை தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பயணி தன்னுடன் பாம்பை எடுத்துச் செல்வதற்குப் பதிவு செய்திருக்கவில்லை. ஆனால், அவர் அனியக் நகரில் வந்திறங்கிய பின்னர் தனது பாம்பை காணவில்லை எனவும் அது விமானத்தில் இருக்கலாம் எனவும் தெரிவித்தார் என விமான நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.