மிஹிந்தலை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மதுபானம் அருந்தி அதிக போதையடைந்த நிலையில் மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பாடசாலையின் 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் இவ்வாறு மதுபானம் அருந்தியுள்ளனர். அவ் வகுப்பில் கற்றுவரும் மாணவர் ஒருவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இம் மாணவர்கள் எட்டு பேரும் நேற்றுமுன்தினம் காலை 6. 30 மணியளவில் பாடசாலையிலுள்ள ஆசிரியர் விடுதியின் அறையில் வைத்து மதுபானம் அருந்தியுள்ளனர்.
இந்த ஆசிரியர் விடுதி நீண்டகாலமாக ஆசிரியர்களின் பயன்பாட்டில் இல்லாதிருந்தமையினால் பாடசாலை நிர்வாகம் அதனை மாணவர்களின் பயன்பாட்டுக்கு அனுமதித்திருந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இம் மாணவர்கள் மதுபான போத்தலொன்றினை கொண்டுவந்து ஆசிரியர்கள் எவரும் வருவதற்குள் அதனை அருந்தியுள்ளனர்.
இம் மாணவர்கள் மதுபானம் அருந்துவதைக் கண்ட அப் பாடசாலையின் மாணவர்கள் சிலர் ஆசிரியர் மற்றும் அதிபருக்கு அறிவித்துள்ளனர். எனினும் ஆசிரியர்கள் அவ்விடத்துக்கு சென்று பார்த்தபோது மது அருந்திய மாணவர்கள் அங்கிருந்து தலைமறைவாகியிருந்த போதிலும், பின்னர் அவர்கள் பாடசாலை வளாகத்தினுள் போதையில் காணப்பட்ட நிலையில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் மிஹிந்தலை பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.
அதிக போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபான போத்தல், மென்பான போத்தல் மற்றும் நொருக்கு தீணிகள் (பைட்ஸ்) என்பவற்றினை குறித்த மாணவர்கள் பாடசாலை வளாகத்தினுள் கொண்டு வந்துள்ள நிலையில் பாடசாலைக்கு ஆசிரியர்கள் வருவதற்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றிருந்த காரணத்தினால் அதனை தடுக்க முடியாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம் மாணவர்கள் போமையில் இருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த எட்டு மாணவர்களது பெற்றோரை வரவழைத்து அவர்களுடன் கலந்துரையாடி குறித்த மாணவர்கள் மீது தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.