பெண் ஒருவரின் காணாமல்போன பணப் பையை கண்டெடுத்து ஒப்படைத்த பொலிஸார்!!

290

பெண் ஒருவரின், 38 ஆயிரம் ரூபா பணத்துடன் காணாமல் போன, பணப் பையை கண்டெடுத்து பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் சுபியான் ஒப்படைத்துள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.

கடந்த 17ம் திகதி மட்டக்களப்பு பிரதான வீதியில் குறித்த பணத்தொகை, கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொலிஸ் உத்தியோகத்தர் ஏ.ரீ.எம்.சுபியானினால் வங்கி ஏ.டி.எம். பண வரவு அட்டை என்பவற்றுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பணப் பை யாருடையது என்பதை கண்டுபிடித்து ஒப்படைப்பதற்கு எந்த தகவலும் பணப் பையில் கிடைக்காத காரணத்தால் பணப் பையில் இருந்த வங்கி ஏ.டி.எம். பண வரவு அட்டையை வங்கியில் கொடுத்து பணப் பை உரிமையாளர் தொடர்பிலான தகவலை அறிந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனை, தேவபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த கணேசன் சுகந்தினி என்ற பெண்ணின் தகவலைப் பெற்று அப் பெண்ணுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பணப் பை உரிமையாளரான அவர் கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு வருகை தந்து 38 ஆயிரம் ரூபா பணம், வங்கி ஏ.டி.எம். பண வரவு அட்டை என்பவற்றுடன் தனது பணப் பையை சந்தோஷமாக எடுத்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.