வவுனியாவில் எதிர்பார்ப்புகளுடன் இடம்பெற்ற உதைபந்தாட்ட இறுதி சுற்றுப்போட்டி!!

466

 
வவுனியா உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Quality Supply நிறுவனத்தின் அனுசரணையுடன் அணிக்கு ஒன்பது பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நேற்று (24.03) மாலை 4 மணியளவில் வைரவர்புளியங்குளம் சிறுவர் பூங்காவில் இடம்பெற்றது.

இப்போட்டியில் வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டுக்கழமும், புதுக்குளம் ஈஸ்வரன் விளையாட்டுக்கழகமும் பலபரீட்சையில் ஈடுபட்டன.

இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் யங்ஸ்ரார் அணியை சேர்ந்த வீரரான குகன் யங்ஸ்ரார் அணி சார்பில் கோல் ஒன்றை போட்டு 1:0 என்ற கோல்கணக்கில் யங்ஸ்ரார் அணியை முன்னிலைப்படுத்தினார்.

அடுத்த பாதி ஆட்டத்தில் ஈஸ்வரன் அணியினர் கடுமையாக போராடியும் துரதிஷ்ரவசமாக எந்தவித கோல்களையும் போட முடியவில்லை போட்டி நிறைவில் யங்ஸ்ரார் அணியினர் 1:0 என்ற கோல்கணக்கில் போட்டியை வென்று சம்பியன் பட்டத்தை தமதாக்கிக் கொண்டனர்.

இப்போட்டியிற்கு ஓய்வு நிலை கிராம உத்தியோகத்தர் திரு.யோகராசா தலைமைதாங்க பிரதம விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் திரு.ரவீந்தர சில்வா மற்றும் அவரது குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் சார்பில் வடமாகாணசபை உறுப்பினர் திரு.புவனேஸ்வரன் அவர்களுடன் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் திரு.ஜனகன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் சிறீரெலொ கட்சியின் இளைஞரணி தலைவர் ப.கார்த்திக், வவுனியா துடுப்பாட்ட சம்மேளனத்தின் தலைவர் திரு.ரதீபன் மற்றும் வவுனியா உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் திரு.யோன்சன், செயலாளர் திரு ராஜன், பொருளாளர் திரு லரீப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

இந்நிகழ்வில் உரையாற்றிய வினோ நோதாரலிங்கம் போட்டிகளின் வெற்றி தோல்வியை வீரர்கள் சமனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் கடந்த காலங்களில் இடம்பெற்ற கைகலப்புக்களை அரசியல் ஆக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கடந்த நாட்களில் இடம்பெற்ற வீரர்களின் கைகலப்பில் அரசியல்வாதிகளை ஒரு பக்க சார்பாக அழைத்திருந்தது தவறு என்றும் அவ்வாறு ஒரு பக்கமாக அரசியல்வாதிகள் வருவார்களாயின் ஏனையவர்களும் தாமும் மறுபக்கமாக வரவேண்டிய சூழ்நிலை வரும் என்றும் எனவே விளையாட்டுக்குள் அரசியல் வேண்டாமென்றும் கடுமையாக கூறியதுடன் வவுனியாவில் சிறந்த ஒரு மைதானத்தை அமைப்பதற்கு தாம் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்

இந்நிகழ்வின் இறுதியில் வெற்றிபெற்றவர்கட்கு காசோலையும் கேடயங்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.