வவுனியாவில் தற்போது கடும் வெயிலுடன் கூடிய காலநிலையே நிலவுகின்றது. வெளியில் செல்ல முடியாத அளவில் வெப்பமான காலநிலை நிலவுகின்றது.
அந்த வகையில் வவுனியாவில் மக்கள் உடல் சூட்டினை தணித்து கொள்வதற்காக பலரும் இளநீர், தர்ப்பூசணிப் பழம் போன்றவற்றை வாங்கி சாப்பிடுவதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
வவுனியாவில் இளநீர் ஒன்று எண்பது ரூபா தொடக்கம் நூறு ரூபா வரைக்கும், தர்ப்பூசணிப் பழம் ஒரு கிலோ எண்பது ரூபாவிற்கும் விற்பனையாகின்றது.
செயற்கைக் குளிர்பானங்கள் பணத்தை மட்டுமல்ல உடல் நலத்தையும் கெடுத்துவிடும். இயற்கை தந்த வரமாய் இளநீர் இருக்க குளிர்பானங்கள் தேவையற்றது. இளநீரின் விலையைப் போலவே அது தரும் பலன்களும் அதிகம்.
இளநீரில் இருக்கும் இனிப்பான விடயங்கள் யாதெனில் இளநீர் நம் தாகத்தைத் தணித்துப் புத்துணர்ச்சி அளிக்கிறது. விட்டமின்கள், தாது உப்புக்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள், சைட்டோகைனின் ஆகியவை அதில் அதிக அளவு இருக்கின்றன.