கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வீட்டுப் பணிப்பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்த மலையகப் பெண்ணொருவர் உடலில் தீக்காயங்களுடன் குளியலறையில் விழுந்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
பொலிசாரின் விசாரணையில் குளியலறையில் இருந்து மண்ணெண்ணெய் போத்தல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிசார் அவரை உடனடியாக களுபோவிலை போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கு 37 வயது இருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர் மலையகத்தின் மடூல்சீமை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.