வவுனியா செட்டிகுளத்திற்கான பேரூந்து சீரில்லை : அரச ஊழியர், மாணவர் ஆர்ப்பாட்டம்!!

672

 
வவுனியாவிலிருந்து செட்டிகுளம் செல்லும் இ.போ.ச சாலை பேருந்துகள் சீரில்லை மற்றும் நேரகாலத்திற்குச் செல்வதில்லை என்று தெரிவித்து இன்று (29.03.2017) காலை 7.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து செட்டிகுளம் செல்லும் பேருந்து குறித்த நேரத்திற்குள் செல்வதில்லை. வவுனியாவில் இருந்து 7மணிக்குச் செல்லும் பேருந்து 9 மணிக்கு செட்டிகுளம் செல்கின்றது. இதனால் அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் தமது கடமைகளை எவ்வாறு சரியாக மேற்கொள்ளமுடியும்?

பாடசாலை செல்லும் மாணவர்கள் சில பாடங்கள் முடிந்த பின்னரே பாடசாலை செல்லவேண்டி எற்பட்டுள்ளது. அதேபோல் அரச ஊழியர்களும் குறித்த நேரத்திற்குள் அலுவலகத்திற்குச் செல்லமுடியவில்லை. இது தொடர்பாக பல தடவைகள் இ.போ.ச. சாலைக்குத் தெரியப்படுத்தியிருந்தோம் எமது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் இது தொடர்பாக தெரியப்படுத்தியிருந்தோம்.

நேரக்கணிப்பாளர் அலுவலகத்திலிருக்கும் தொலைபேசியில் அழைப்பு ஏற்படுத்த முடியாது. வரும் அழைப்பை மட்டுமே பெறமுடியும். பேருந்து வந்தால் செல்லும் என்றும் நேரக்கணிப்பாளர் தெரிவித்துள்ளார். எமக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே இன்று போராட்டம் மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டுள்ளது என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு இன்று மத்திய பேருந்து நிலையத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டபோது செட்டிகுளத்திற்கு திடீரென ஒரு பேருந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்களை விட்டுவிட்டுச் சென்றுள்ளது. அரச ஊழியர்கள் துரத்திச் சென்றும் பேருந்து நிற்காமல் சென்றதைக்காணக்கூடியதாக இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது தொடர்பாக மனு ஒன்றை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் இன்று கையளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை செட்டிகுளம் பகுதியில் பேருந்து நிலையத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.