நாடு முழுவதும் தற்போது டெங்கு நோய்க்கு இணையானதொரு வைரஸ் மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற மூன்று வகையான தொற்று நோய்கள் பரவி வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ள நிலையில் இந் நோய்த் தாக்கங்களிலிருந்து தம்மையும், தமது சிறு பிள்ளைகளையும் இயன்றளவு பாதுகாத்துக் கொள்ளுமாறு மினுவாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவின் பத்தண்டுவன பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ். ஆர். எம். எஸ். ஆர். சமர திவாகர தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சிறு பிள்ளைகளுக்கு இந்நோய்கள் விரைவில் தொற்றக் கூடும் என சுகாதார அமைச்சு சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளதால், இது குறித்து பெற்றோர்கள் முன் கூட்டியே விழிப்புடனும், அவதானத்துடனும் செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மினுவாங்கொடை, கல்லொழுவை,கோப்பிவத்தை ஆகிய பிரதேசங்களில் டெங்கு மற்றும் டெங்கு நோய்க்கு இணையானதொரு வைரஸ் காய்ச்சல் மிகத் துரிதமாகப் பரவி வருவது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இப் பிரதேசங்களிலுள்ள எவருக்காவது காய்ச்சல் ஏற்பட்டுள்ள அறிகுறிகள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் தென்பட்டால் எந்தவித கால தாமதமுமின்றி அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் பொது மக்களைக் கேட்டுள்ளார்.






