உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறப்பானை – அதியாரவத்த தோட்ட வீதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்திலுள்ள ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந் துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றுமுன்தினம் இரவு மரண வீடு ஒன்றுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் உடப்புஸ்ஸல்லாவ, டெல்மார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், படுகாயமடைந்தவர்கள் இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
விபத்தில் ஊவாபரணகம, திம்புலன பிரதேசத்தை சேர்ந்த சிறிவெடி முதியன்சேலாகே அபேசிங்க (61) என்ற, முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற போது அப்பிரதேசத்தில் அதிகளவிலான பனிமூட்டத்துடனான காலநிலை நிலவியதன் காரணமாக விபத்து இடம்பெற்று சில மணிநேரத்துக்கு பின்னரே விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியை பொதுமக்கள் அவதானித்து, அங்கு சென்று அவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அதிக பனிமூட்டத்துடனான காலநிலையினால் சாரதியினால் பாதையை இனங்கண்டுகொள்ள முடியாமையினால் இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உதவிப் பொலிஸ் பரிசோதகர் நுவன் ஜயலத் தலைமையில் இடம்பெற்றுவருகின்றன.






