இலங்கை நலன்களைச் சீரழிக்கும் திட்டத்தில் அமெரிக்கா : பாதுகாப்பு செயலர் அதிருப்தி!!

564

gotapaya

இலங்கை நலன்களைச் சீரழிக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

30 வருடங்கள் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்த பின்னர் ஜனநாயகத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் தனது அதிகாரங்களைக் கொண்டு எல்லாவற்றையும் செய்த போதிலும் அமெரிக்கத் தூதரகம் அவற்றை வலுவற்றதாக்கியுள்ளது.

நாம் ஒரு பலகட்சி நாட்டில் இருக்கிறோம். இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த போது கூட நாம் தேர்தல்களை நடத்தினோம். ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணி மீது குற்றம்சாட்டுவது நியாயமற்றது.

தெற்கில், அமெரிக்க தூதரகத்தின் பின்புலத்துடன் எந்தவொரு மட்டத்திலும் தேர்தல்களில் அவர்களால் வெற்றி பெறமுடியாது. சில வங்குரோத்து அரசியல் கட்சிகள் கூட அமெரிக்கத் தூதரகத்தைப் போன்றே குற்றம்சாட்டுகின்றன.

18வது திருத்தச்சட்டத்தின் மூலம் இலங்கை ஜனாதிபதி பதவி வரம்பு நீடிக்கப்பட்டதை மேற்கு நாடுகள் விமர்சிக்கின்றன. ஆனால் அண்மையில் ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மேர்க்கல் மூன்றாவது பதவிக்காலத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகளும் அவர்களின் பதிலிகளும் தமிழ் மக்களுக்கு உத்தரவிட்ட போது மேற்குலக சக்திகள் மைளனம் காத்தன.
போரில் பிரபாகரன் உயிர் தப்பியிருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறைக்கைதியாகவே இருந்திருக்கும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியாது.

வடக்கு மாகாணசபைத் தேர்லில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியை பிரிவினைவாத உணர்வுகளை ஊக்குவிப்பதாக தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டால் மோசமான தவறாகி விடும் என்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.