புதைக்குழிக்குள் சிக்குண்ட 11 யானைகள் பாதுகாப்பாக மீட்பு!!

556

கம்போடியா – கியோ செய்மா வனவிலங்கு சரணாலயத்திலுள்ள புதைக்குழிக்குள் சிக்குண்டிருந்த 11 யானைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.

வியட்நாம் யுத்தத்தின் ​போது குறித்த சரணாலயத்தின் பல்வேறு பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டுள்ளமையினால், அங்கு பாரிய குழிகள் ஏற்பட்டு அவை புதைக்குழிகளாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதைக்குழிகளில் கடந்த 24ஆம் திகதி நீர் அருந்துவதற்காக 3 குட்டி யானைகளும், 8 பெரிய யானைகளும் சென்றுள்ளன.

இவ்வாறு நீரை அருந்த முயற்சித்த வேளையிலேயே குறித்த யானைகள் புதைக்குழிக்குள் வீழ்ந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யானைகள் குழிக்குள் வீழ்ந்துள்ளதை அவதானித்த பிரதேசவாசிகள் வனத்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைத் தந்த வனத்துறை மீட்புக்குழுவினர் மூன்று நாட்கள் போராட்டத்தின் பின்னர் யானைகளை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.