வவுனியா குருமன்காட்டில் இ.போ.ச பேரூந்தினை வழிமறித்த இளைஞன் : நடந்தது என்ன?

616

வவுனியா குருமன்காடு பகுதியில் இன்று (03.04.2017) இ.போ.ச பேரூந்தினை இளைஞன் ஒருவர் வழிமறித்ததுடன் போக்குவரத்துப் பொலிஸாரிடமும் முறையிட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் ஊடாக மெனிக்பாம் செல்லும் இ.போ.ச பேரூந்து எவ்வித சமிச்சை விளக்குகளுமின்றி ( பிறேக் லைட், சிக்னல்) குருமன்காடு வரை பயணித்துள்ளது. இதனைக் கண்ட இளைஞர் ஒருவர் இ.போ.ச பேரூந்தினை வழிமறித்துடன் போக்குவரத்துப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பேரூந்தின் சமிக்கை விளக்குகளை சோதனை செய்ததுடன், பேரூந்தினை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இதன் பின்னர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பேரூந்தினை சீர் செய்யுமாறு இ.போ.ச சாரதி, நடத்துனர்களை பணித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த பேரூந்தின் நடத்துனரை தொடர்பு கொண்ட போது,

வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் ஊடான பாதை பல வருடகாலமாக சீரற்றுக் காணப்படுகின்றது. பள்ளம் நிறைந்த இவ்வீதியில் பயணம் செய்வது மிகக்கடினம். தினசரி பேரூந்தின் சமிச்சை விளக்குகளை சீர்செய்தாலும் அவ்வீதியால் சென்றால் மீண்டும் பழுதாகி விடுகின்றது.

நாங்கள் மக்களுக்காகவே சேவைகளை மேற்கொள்கின்றோம். இரண்டு மணித்தியாலங்கள் நாங்கள் பேரூந்தினை திருத்த வேலைக்காக எமது சாலைக்கு எடுத்துச்சென்றால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் . தற்போது பேரூந்து இ.போ.ச வவுனியா சாலையில் திருத்த வேலைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.