இந்திய கிரிக்கெட் அணியில் தனது திறமையால் வளர்ந்து வரும் விராத் கோலி, தற்போது சச்சின் மற்றும் டோனியை மிஞ்சும் அளவுக்கு உயர்ந்து விட்டார்.
அணித்தலைவருக்கு உரிய தகுதிகளை வளர்த்து வரும் விராத் கோலி, தனது தோற்றத்தாலும் அணுகுமுறையாலும் ஆண்டுக்கு 10 கோடி வருமானம் தரக்கூடிய ஜேர்மனியின் மாபெரும் விளையாட்டு நிறுவனமான அடிடாசின் விளம்பர ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார்.
இதன்மூலம் இந்த நிறுவனத்தின் ஆடைகள் மற்றும் காலணிகள் விளம்பரங்களில் இன்னும் மூன்று வருடங்களுக்கு விராத் கோலி தோன்றுவார்.
அடிடாசின் விளம்பரங்களில் வரும் சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க போவதாக தகவல் வெளியானதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் குறித்த நிறுவனம் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.
அத்துடன் சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் வோக் ஆகியோரை தங்களது நிறுவனத் தயாரிப்புகளின் விளம்பரத் தூதுவர்களாக கொண்டுள்ள பிரபல டயர் நிறுவனம் ஒன்று 6.5 கோடிக்கு தற்போது விராத் கோலியை ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்தாண்டே விளம்பர வருமானத்தின் மூலம் 40 கோடி சம்பாதித்தவர் விராத் கோலி, தற்போது புதிய ஒப்பந்தங்களின் மூலம் டோனி, சச்சினை மிஞ்சியுள்ளார்.
ஏற்கனவே பெப்சி, டொயோட்டா, சிந்தால் டியோடிரன்ட்ஸ் உள்ளிட்ட 13 நிறுவன விளம்பரங்களில் கோலி தோன்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.