அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இரு வார கால இடைவெளியில் பாரிய 10 மலைப்பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 15 அடிகளை விட நீளமான இரு பாம்புகளும் அடங்கும்.
இவற்றில் மிகப் பெரிய பாம்பு 15 அடி மற்றும் 10 அங்குல நீளமானது. இரண்டாவது மிகப் பெரிய பாம்பு 15 அடி மற்றும் 2 அங்குல நீளமானது. பாம்புப் பிடிப்பதற்கான அனுமதிப் பத்திரம் கொண்டுள்ளவர்களால் இப் பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிக்கலஸ் பனோஸ், லியனார்டோ சான்சஸ் ஆகியோர் அண்மையில் 15 அடி நீளமான மலைப்பாம்பை பிடித்தனர். பர்மிய மலைப்பாம்புகள் புளோரிடா மாநிலத்தில் பொது இடங்களை அழிப்பதுடன், சுற்றாடல் உணவுச் சங்கிலிக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், தென் புளோரிடா நீர் முகாமைத்துவத் துறை அதிகாரிகளால் 175,000 டொலர் செலவில் பாம்புகளைப் பிடிப்பதற்கான திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத் திட்டத்தில் 25 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். பாம்புகளைப் பிடிப்பதற்கு இவர்களுக்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு நாளாந்தம் 8 மணித்தியாலங்கள் வரை மணித்தியால அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. 4 அடிகளுக்கு மேற்பட்ட பாம்புகளைப் பிடித்தால் மேலதிகமாக 50 டொலர்கள் (சுமார் 7,650 ரூபா) வழங்கப்படும். அத்துடன், மிகப் பெரிய பாம்புகளுக்கு 4 அடிக்கும் அதிகமான ஒவ்வொரு அடி நீளத்துக்கும் 25 டொலர்கள் (3,825 ரூபா) வழங்கப்படும்.
இதன்படி, 15 அடி நீளமான பாம்புக்கு 275 டொலர் (சுமார் 42, 075 ரூபா) கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.








