பிலிப்பைன்ஸ் முன்னாள் அழகுராணி சுட்டுக் கொலை!!

802

 
பிலிப்பைன்ஸை சேர்ந்த முன்னாள் அழகுராணி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 23 வயதான மேரி கிறிஸ்டைன் பலக்தஸ் என் பவரே இந்த முன்னாள் அழகுராணி ஆவார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பலக்கன் நகரில், தனது வீட்டில் வைத்து கடந்த 5 ஆம் திகதி மேரி கிறிஸ்டைன் சுடப்பட்டுள்ளார். மேரி கிறிஸ்டைனின் வீட்டுக்கு புதிய மலர்கள் மற்றும் சொக்லேற்றுகள் சகிதம் சென்ற இரு நபர்கள் அவரது வீட்டுக் கதவைத் தட்டினர்.

அதையடுத்து மேரி கிறிஸ்டைன் கதவைத் திறந்தவுடன், அவர் மீது மேற்படி நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு மோட்டார் சைக்கிளொன்றில் தப்பிச் சென்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத் துப்பாக்கிப் பிரயோகத்தினால் தலையில் படுகாயமடைந்த மேரி கிறிஸ்டைன் வைத்தியசாலையை நோக்கி அழைத்துச் செல்லப் பட்டவேளையில் அம்பியூலன்ஸ் வாகனத்தில் உயிரிழந்தார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற லா புலகேன்யா அழகுராணிப் போட்டியில் முதலிடம் பெற்ற மேரி கிறிஸ்டைன் 2010 ஆம் ஆண்டில் மற்றொரு அழகுராணி போட்டியில் முதலிடம் பெற்றிருந்தார்.

மேரி கிறிஸ்டைனை முன்னர் காதலித்த இளைஞர் ஒருவரை தாம் விசாரித்து வருவதாக பொலிஸ் அத்தியசட்கர் ஜூலியோ லிஸார்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொலிஸ் அத்தியசட்கர் ஜூலியோ லிஸார்டோ மேலும் கூறுகையில், ‘நாம் .45 ரக பிஸ்டல் ஒன்றின் வெற்றுத் தோட்டாவைக் கண்டெடுத்துள்ளோம்.

இத் துப்பாக்கி வாடகைகைக்குப் பெறப்பட்டிருக்கலாம் என நாம் நம்புகிறோம். துப்பாக்கிப் பிரயோகத்துக்கு முன்னர் மேற்படி நபர்கள் இருவரும் அப்பகுதியில் நடமாடியதை அங்குள்ளவர்கள் கண்டுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸின் ரெஜினா கார்மேலா பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை பயின்று வந்த மேரி கிறிஸ்டைனை அவரின் நண்பர்கள் ‘ரின் என செல்லமாக அழைத்து வந்தனர். அழகுராணியாக தெரிவான போதிலும் எளிமையாக பழகுபவராகப் பலராலும் பாராட்டப்பட்டிருந்தார்.

அவர் படுகொலை செய்யப்பட்டமையினால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள், ‘ரின்’னுக்கு நீதி வழங்குமாறு #JusticeForTin எனும் ஹேஸ்டெக் சகிதம் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

‘ரின்னுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது எமக்குத் தெரியவில்லை. நீதி நிலைநாட்டப்படும் என நாம் நம்புகிறோம்’ என அவரின் நண்பி ஒருவர் தெரிவித்துள்ளார்.