ஏழு நாட்களில் 16 கோடி வருமானம்!!

224

கடந்த வாரம் அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக சுமார் ஐந்து இலட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ளதாக நெடுஞ்சாலை முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 7ம் திகதி முதல் 13ம் திகதி வரை இந்த வாகன போக்குவரத்து இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் 160 மில்லியன் ரூபா வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளில் 12 சிறு வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இன்றும் நாளையும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு கஹதுடுவ, கொட்டாவ, கொத்தலாவல மற்றும் கடுவெல ஆகிய நுழைவுப் பாதைகளில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படடுள்ளது.

இதேவேளை கடந்த வருடத்தில் இடம்பெற்ற விபத்துக்களுடன் ஒப்பிடுகையில், இந்த 3 தினங்களில் விபத்துக்கள் காரணமாக சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் 2.4 சதவீதமான நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்துள்ளார்.

வீடுகளில் ஏற்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளன. இவ்வருடத்தில் தொழில் ரீதியான விபத்துக்கள் 23 பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த வருடத்தில் இத்தொகை 20 ஆகும்.

விளையாட்டுக்களின் மூலம் ஏற்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைவடைந்துள்ளது. இருப்பினும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை சிறிய அளவில் அதிகரித்துள்ளது. முச்சக்கர வண்டி விபத்துக்களின் காரணமாகவே இவை இடம்பெற்றன.

முச்சக்கர வண்டிகளை குறுகிய தூரத்திற்காக மாத்திரமே பயன்படுத்த வேண்டும். இருப்பினும் பெரும்பாலானோர் இதனை யாழ்ப்பாணம், கதிர்காமம் போன்ற நீண்ட தூர பயணங்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.

வீதிகளில் வாகன நெரிசலுக்கு முக்கிய காரணம் முச்சக்கர வண்டிகளாகும். வன்முறைகளால் ஏற்படும் அனர்த்தங்களின் எண்ணிக்கை இம்முறை குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளன. 5 சதவீதமாக இவை குறைவடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.