மட்டக்களப்பு ,வாழைச்சேனை பொலிஸ் பிரிவுற்குட்பட்ட கொண்டையன்கேணி முருகன் கோயில் வீதியிலேயே கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தை ஒன்றின் சடலத்தை இன்று வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த சடலத்தில் தலையும் மார்புப் பகுதியும் மாத்திரம் உள்ள நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.00 மணியளவில் தனது வீட்டுக்கு முன்பாக கைக்குழந்தை ஒன்றின் சடலத்தை நாய் உட்கொள்வதைக் கண்ட பெண்மணி ஒருவர் அயலவர்களின் உதவியுடன் இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்ற வாழைச்சேனை பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். இந்த நிலையில் சடலத்தை பார்வையிட்ட வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எம்.பி.எம்.ஹுஸைன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்தார்.
இதனைத் தொடர்ந்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்தக் கைக்குழந்தையின் தலையும், மார்புப் பகுதியுமே உள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள இந்தச் சடலத்தின் கால்கள் மற்றும் கைகளை விலங்குகள் உட்கொண்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.







