இலங்கையில் பாலியல் குற்றங்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை!!

553

stopviolenceagainstwomen

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் இந்த குற்றச் செயல்களுக்கு பொதுமக்கள் முன் பிரம்படி தண்டனை வழங்குவது தொடர்பான யோசனையை முன்வைக்க எண்ணியுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை காண முடிவதாக அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.

முன்னர் பல சந்தர்ப்பங்களில் இந்த போக்கை தடுத்து நிறுத்த கடுமையான சட்டங்களை அமுல்படுத்தும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. பிரச்சினைகள் காரணமாக அவற்றை கொண்டு வர முடியாமல் போனது.

பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்குவது பற்றிய யோசனைகள் முன்மொழியப்பட்டன.

மரண தண்டனையை அமுல்படுத்துவது உணர்வு பூர்வமான பிரச்சினை என்பதால் இந்த குற்றங்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை வழங்கும் யோசனை முன்மொழியப்பட உள்ளது.

இந்த யோசனை நாடாளுமன்றத்திற்கும் நீதியமைச்சுக்கும் வழங்கப்படும். அதேவேளை பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவது தொடர்பில் ஊடங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் யோசனை ஒன்றையும் முன்வைக்க உள்ளேன்.

ஊடகங்கள் இந்த சம்பவங்கள் தொடர்பில் வரம்பை மீறி செய்திகளை வெளியிடுகின்றன. அவற்றை தடுக்கும் நோக்கங்கள் புதிய சட்டத்தில் உள்ளடக்கப்படும் என்றார்.