கணனி தகவல்களை அழிக்கும் வைரஸ் : இலங்கை கணனி அவசர பிரிவு எச்சரிக்கை!!

278

மின்னஞ்சல் மூலம் தற்போது கணனி வைரஸ் ஒன்று இணையத்தளங்களில் வேகமாக பரவி வருவதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

தங்களுக்கு வரும் சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களை திறக்காமல் இருப்பதே இந்த வைரஸில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கை என அந்த பிரிவின் பிரதான தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் Ransomware வைரஸ் என அடையாளப்படுத்தப்படுகின்ற நிலையில் தங்களுக்கு கிடைக்கும் மின்னஞ்சல் இணைப்பினை (attachment) திறக்கும் போதும் தங்கள் கணனி வைரஸ் தாக்குதலுக்குள்ளாக கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓடியோ கோப்புகள், செய்தி வீடியோக்கள் போன்று இணைப்புகளாக கிடைக்கும் இந்த போலி மின்னஞ்சல்கள் சில சந்தர்ப்பங்களில் இந்த வைரஸாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கணனியில் இந்த வைரஸ் தாக்கினால் கணனியில் உள்ள அனைத்து ஆவண தகவல்களின் தரவுகள், புகைப்படங்கள், மின்னஞல்கள் ஆகியவைகள் கண்டுபிடிக்க முடியாத ஒன்று போன்றாகிவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

தங்கள் கணனிகளில் உள்ள ஆவண தகவல்களின் தரவுகள், புகைப்படங்கள் மற்றும் ஏனையவைகளை இன்னும் ஒரு இடத்தில் காப்பு பிரதி (backup) எடுத்து வைப்பது பாதுகாப்பான விடயமாக இருக்கும் எனவும், கணனியில் உள்ள வைரஸ் காடினை தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே இருப்பது நல்லது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது வரையில் கணனி வைரஸ் தாக்குதலுக்குள்ளாகியுள்ளமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

www.cert.gov.lk இணையத்தளத்தினை பார்வையிடுவதன் ஊடாக இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது.