அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை ஒதுக்க முடிவு : காரணம் என்ன?

691

அதிமுகவில் இருந்து சசிகலா மற்றும் தினகரன் சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம் என அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, வீரமணி, அன்பழகன், சி.வி.சண்முகம், பெஞ்சமின், ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆட்சியை தொடர்ந்து சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசித்தோம். தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம்.

தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது. அனைத்து நிர்வாகிகளுடன் கலந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளோம்.

தொண்டர்கள் விருப்பப்படி குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். கட்சியை வழி நடத்த குழு அமைப்போம். தொடர்ந்து 4 ஆண்டு கால ஆட்சியை நாங்கள் நிறைவு செய்வோம். ஓபிஎஸ் பேச்சுவார்த்தைக்கு வந்தால் அவருடன் பேச்சு நடத்தப்படும் என கூறியுள்ளார்.