மீதொட்டமுல்லயில் மீத்தேன் வாயு அதிகரித்துள்ளதாக ஜப்பான் நிபுணர்கள் தெரிவிப்பு!!

285

ஜப்பான் பிரதமரின் பணிப்புரைக்கு அமைய, இலங்கைக்கு வருகை தந்துள்ள விசேட குழுவினர் மீதொட்டமுல்ல குப்பை மேட்டை இன்று கண்காணித்தனர். அவர்களின் அறிக்கை சில தினங்களுக்குள் அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

நிலநடுக்கம், மண்சரிவு, வாயு தொடர்பான விசேட நிபுணத்துவமிக்க 12 உறுப்பினர்கள் இந்த குழுவில் அடங்குகின்றனர். குறித்த பகுதியை 5 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் கண்காணித்ததின் பின்னர், அவர்களின் முதற்கட்ட தீர்மானங்களை பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவித்தனர். மேஜர் ஜெனரல் ஆர்.ஏ.நுகேரா தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

ஜப்பான் குழுவினரின் முதற்கட்ட கண்காணிப்பிற்கு அமைய, பிரதேசத்தில் மீத்தேன் வாயு 16 வீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், தீயைப் பற்றவைக்கக்கூடிய பொருட்களின் பாவனையை தவிர்க்குமாறும் இக்குழுவினர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

ஜப்பான் நிபுணர்களின் கண்காணிப்பிற்கு அமைய, பிரதேசத்திலுள்ள நீரை அகற்றுவதற்காக நான்கு கட்டங்களின் கீழ் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீத்தேன் வாயு காற்றுடன் கலந்துள்ளமையால் குப்பைமேட்டின் கீழ் பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் போது முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினருக்கும் இக்குழுவினர் தெளிவூட்டவுள்ளனர்.