கழிவறைத் தொட்டிக்குள் யுவதி ஒருவரின் கை இறுகிக் கொண்டதால், தீயணைப்புப் படையினரின் உதவியுடன் கழிவறைத் தொட்டி உடைக்கப்பட்டு அந்த யுவதி மீட்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த கிறெஸ் ஹெண்டர்சன் எனும் இந்த யுவதி, நியூ கெனே நகரிலுள்ள வீடொன்றுக்கு அண்மையில் குடிபெயர்ந்தார்.
அவ் வீட்டின் கழிவறையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை அவதானித்த அவர், குழாய் பழுதுபார்க்கும் ஊழியர்களை அழைக்காமல் தானே அடைப்பை அகற்றுவதற்கு முற்பட்டார். இதற்காக, கழிவறைத் தொட்டியில் கிறேஸ் ஹெண்டர்சன் தனது கையை நுழைத்தார்.
அப்போது, அவரின் கையிலிருந்த கைக்கடிகாரம் கழிவறைத் தொட்டியின் அடிப்புற வளைவில் சிக்கிக் கொண்டது.
அதனால் கையை வெளியே எடுக்கமுடியாமல் கிறேஸ் ஹெண்டர்சன் தவித்தார். நீண்ட நேர முயற்சிக்குப் பின் தீயணைப்புப் படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்பின் தீயணைப்பு வீரர்கள் அங்குவந்து கழிவறைத் தொட்டியை கழற்றி எடுத்தனர். அப்போதும் கிறேஸின் கை அதற்குள் சிக்கியிருந்தது.
கிறேஸின் வீட்டு வளாகத்தின் பின்புறத்தில் வைத்து, கழிவறைத் தொட்டியை தீயணைப்புப் படையினர் உடைத்ததன் மூலம் கிறேஸ் ஹெண்டர்சனை அவர்கள் விடுவித்தனர்.
இதன்போது அயலவர்களால் பதிவுசெய்யப்பட்ட வீடியோவை கிறேஸ் ஹெண்டர்சன் இணையத்தில் வெளியிட்டுள்ளார். பல்லாயிரக்கணக்கான தடவைகள் அவ் வீடியோ பார்வையிடப்பட்டுள்ளது.