செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்திலிருந்து ஹரிஸ் ஜெயராஜ் விலகியது ஏன்?

307

haris

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படம் இரண்டாம் உலகம். இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தில் படப்பிடிப்பு தொடங்கி ஒன்றரை வருடத்துக்கும் மேல் ஆகிவிட்டது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பாடல்கள் வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து கிராபிக்ஸ் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இந்நிலையில், படத்தை விரைவில் வெளியிட செல்வராகவன் எண்ணினார். இதற்காக பின்னணி இசையை விரைந்து முடித்துத் தரும்படி ஹரிஸ் ஜெயராஜை நெருக்கினார் செல்வராகவன். ஆனால், அவரோ பிற படங்களில் பிசியாக இருந்ததால் இப்படத்தின் பின்னணி இசையை உடனடியாக முடித்துக் கொடுக்கமுடியாத நிலையில் இருந்தார்.

இதனால் பின்னணி இசையை மட்டும் வேறொரு இசையமைப்பாளரை வைத்து முடிக்க செல்வராகவன் முடிவு செய்தார். அதன்படி அனிருத்தை இப்படத்தின் பின்னணி இசையை அமைக்க ஒப்பந்தம் செய்தார்.

இந்நிலையில் செல்வராகவன் படத்தில் இருந்து விலகியது ஏன் என்பதற்கு ஹரிஸ் ஜெயராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, தனது இணையதள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது..

நான் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்கள் வெளியாகும் நிலையில் உள்ளதால் அவற்றிற்கான வேலையை முடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டாம் உலகம் படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணியை உடனடியாக தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால்தான் அப்படத்திலிருந்து விலகவேண்டிய சூழல் உண்டானது என்று கூறியுள்ளார்.