யாழில் யுவதி மீது துஷ்பிரயோக முயற்சி : மடக்கி பிடித்த மக்கள்!!

239

யாழ். ஊர்காவற்றுறையில், யுவதி ஒருவருக்கு மயக்க மருந்தினை தூவி துஷ்பிரயோகம் செய்வதற்கு முயற்சி செய்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் அதிகாலை 12.30 மணியளவில் ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள வீடொன்றில் நுழைந்த நபர், தனித்து இருந்த 18 வயதுடைய யுவதியின் மேல் மயக்க மருந்தினை தூவி வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்துள்ளார்.

இருப்பினும், இதனை கண்ட குறித்த யுவதி உடனேயே கூக்குரலிட்டு அயலவர்களை அழைத்துள்ளார். அங்கு வந்த அயலவர்கள் சந்தேகநபரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபர் முன்பே பொலிஸ் கடமையில் இருந்து நீக்கப்பட்டவர் எனவும், மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியை சேர்ந்த 35 வயதுடையவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த நபரை நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது, எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இவர் ஊர்காவற்றுறை பகுதியில் தங்கி இருந்து கட்டட நிர்மாண பணிகளில் ஈடுபட்டு வருபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.