திரிபுரா மாநிலத்தில் தனது கணவரின் உயிரை காப்பாற்ற தான் பெற்றெடுத்த குழந்தையை தாய் விற்பனை செய்துள்ளார்.
ஹல்தியா என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த பெண்ணின் கணவர், அன்றாடக் கூலிவேலை செய்துதான் தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கணவருக்கு, திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. தனது கணவனை பாதிப்பில் இருந்து மீட்க போராட்டி வந்தார். ஆனால் அடிப்படைச் செலவுகளுக்குக் கூட பணமில்லாமல் இருந்து வந்துள்ளது.
கணவனின் நோய் ஒருபுறமும், வறுமை மறுபுறமும் வதைத்து வந்த நிலையில் ஓர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனாலும் கணவரின் நோய்க்கு முன் ஆண் மகனைப் பெற்றெடுத்த மகிழ்ச்சியை அந்த வறுமைத் தாயால் அனுபவிக்க இயலவில்லை.
பிரசவித்த உடம்போடு கணவனின் சிகிச்சைக்காக உதவிகேட்டு அலைந்து திரிந்த அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை. கணவன் உயிரைக் காப்பாற்ற வேறு வழியே இல்லையா என நிர்க்கதியற்று தவித்தவருக்கு தனது குழந்தை மட்டுமே கணவரின் உயிரைக் காப்பாற்றக் கூடிய துருப்புச்சீட்டு என்ற முடிவுக்கு வந்தார்.
பிறந்து 11 நாட்களே ஆன தனது குழந்தைக்கு விலையாக 5000 ஆயிரம் ரூபாய் வைக்கப்பட்டது. பணமும் குழந்தையும் கைமாறியது. சிலநாட்கள் கழித்து விஷயத்தை கேள்விப்பட்ட தனியார் தொண்டு நிறுவனமான சைல்டு லைன் ஃபவுண்டேசன் குழந்தையை மீட்டிருக்கிறது.
தற்போது அந்தக் குழந்தையை அரசு காப்பகத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர்.






