வயிற்றில் இருந்தது 2 குழந்தைகள் : பிறக்கும் போது 3 ஆன அதிசயம்!!

430

பிரிட்டிஷ் பெண்ணொருவர் இரட்டை குழந்தைகளை கருத்தரித்து, அவற்றை கருவில் சுமந்தபோது, இன்னொரு குழந்தையையும் கருத்தரித்ததாக மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

இது தான் சூப்பர் கருத்தரிப்பு என்று அழைக்கப்படுகிறது. ஒரு முறை கருத்தரித்து குழந்தையாக வளர்ந்து வருகின்ற கருவை கொண்டிருக்கும் பெண், பின்னர் இரண்டு வாரத்தில் அல்லது ஒரு மாதத்திற்குள் மீண்டும் கருத்தரிப்பது இவ்வாறு அழைக்கப்படுகிறது.

மனிதரில் இவ்வாறு நிகழ்வது மிகவும் அரிதான ஒன்று. கடந்த நூறு ஆண்டுகளில் இது போன்ற சூப்பர் கருத்தரிப்பு நடந்து பிரசவிப்பது ஆறாவது முறையே.

கருவள நிபுணர் பேராசிரியர் சைமன் பிஷெல் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், “இவ்வாறு நடைபெறக் கூடாது. ஆனால் நடந்து விடுகிறது” என்கிறார்.

“1865 ஆம் ஆண்டு முதல்முறை இவ்வாறு நடைபெற்றது. பத்தாண்டுகளில் அவ்வப்போது ஒரு சில இவ்வாறு நடைபெறுவதாக செய்தி வெளியாகிறது” என்று அவர் தெரிவித்தார்.

பெண்ணொருவர் ஒருமுறை கருத்தரித்து விட்டால் அவ்வளவு தான் என்று எண்ணுகிறோம். ஆனால், 1978ல் ஆம் ஆண்டு முதல்முறையாக சோதனைக்குழாய் மூலம் குழந்தை பிரசவிக்க உதவிய இந்த மருத்துவர் அவ்வாறு கருதவில்லை.

“பரிணாம வளர்ச்சி குறிப்பாக பெண்கள் ஒருமுறை கருத்தரித்து விட்டால், அவர்களிடம் இன்னொரு கரு முட்டை வெளிப்படாது போகும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

“எப்போதாவது அவ்வாறு நடைபெற்றால், அந்த கரு முட்டை சிசுவாக உருவாக முடியாது. ஆணின் விந்து அதனுள் செல்ல முடியாது என்பதே இதற்கு காரணம்” என்று அவர் கூறுகிறார்.

அவ்வாறு நடந்து விட்டாலும், கரு வளரத் தொடங்கி மாற்றங்கள் உருவாக தொடங்கிவிட்டதால், கருப்பையின் சுவர் இன்னொரு கரு முட்டையை ஏற்றுகொள்ள முடியாது”.

சூப்பர் கருத்தரிப்பு நடப்பது அபூர்வமானது. ஆனால், எப்போதும் மகிழ்ச்சியான முடிவு ஏற்படுவதில்லை.

“வளர்ந்து வருகின்ற ஒரு கருவின் வளர்ச்சி நின்றுபோய், கருப்பையிலேயே வளர்ந்து வரும் இன்னொரு கரு இறந்துள்ளதும், மிக முன்னதாகவே பிறந்துள்ளதும் நிகழ்ந்துள்ளது” என்கிறார் பேராசிரியர் சைமன் பிஷெல்.

கருப்பையில், இந்த வளர் கருக்கள் எப்படி சமாளிக்கின்றன என்பதும், உணவு பெற்றுகொள்வதில் அவை போட்டியிடுமா? என்பதும் கேள்விகளாக எழுகின்றன.

“இது கருவளர் படலப்பையை (தொப்புள்கொடி) பொறுத்தது. இதுதான் வளர்கின்ற கருவுக்கு ஊட்டச்சத்து வழங்குவதற்கும், வளர்கின்ற குழந்தை காணும் வளர்ச்சி மேம்பாட்டிற்கும் மிகவும் முக்கியமானது” என்று சீமோன் பிஷெல் மேலும் தெரிவித்தார்.

“இந்த தொப்புள்கொடி இயல்பாக வளர்ந்து மேம்படுகிறது என்றால் எந்த பிரச்சனையும் இல்லை. சூப்பர் கருத்தரிப்பு நிலைமைகளில், இது சரியாகவே செயல்பட்டுள்ளது”.

கொறித்து உண்ணும் விலங்குகள், முயல்கள், குதிரைகள் மற்றும் ஆடுகள் போன்ற விலங்குகளிடம் இது பரவலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மனிதரில் இவ்வாறு நடைபெறுவது மிகவும் அரிது என்றாலும், இத்தகைய அற்புத பிறப்புகள் நிகழவே செய்கின்றன. சிலவேளைகளில் இது மிக தீவிரமாக இருக்கலாம்.

“சில ஆண்டுகளுக்கு முன்னால், ரோமில் ஒருமுறை இத்தகைய சூப்பர் கருத்தரிப்பு நடைபெற்றபோது, அது 3 முதல் 4 மாத இடைவெளியில் நிகழ்ந்ததாக கணித்திருந்தனர்” என்கிறார் பேராசிரியர் சைமன் பிஷெல்.